கோவிந்தா.. கோவிந்தா.. மெல்ல மெல்ல மறையும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு.!
purattasi vazhipadu for govindhan 2022
புரட்டாசி வழிபாட்டை இப்படி செய்து பாருங்க?
புரட்டாசி மாதம் என்றாலே... அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்சவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்கு சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். எளிமையான முறையில் புரட்டாசி வழிப்பாட்டை இப்படி செய்து பாருங்கள்... பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்...
இந்த விரதத்தை புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் கடைபிடிக்கலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தபடுத்தி குளித்து, பூஜை சாமான்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
கலச சொம்பு :
பின், கலச சொம்பை எடுத்து, அதற்கு நாமம் போட்டு துளசி மாலை சுற்றிக்கொண்டு பின், இந்த சொம்பில் வீடு வீடாக சென்று தளுகைக்கு அரிசி வாங்க வேண்டும். இப்படி செய்வதால் நம்முடைய அகந்தை முற்றிலும் ஒழியும்.
அப்படி தானாம் வாங்கி கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து தான் பூஜை செய்து நைவேத்தியங்கள் படைக்க வேண்டும்.
பெருமாளுக்கு படையல் :
வாழை இலையில் புளி சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், வடை, சுண்டல், பாயாசம் இடம் பெற வேண்டும்
சில குடும்பங்களில் சாதம், கூட்டு, குழம்பு, பொரியல், வடை, அப்பளம், பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம்.
நைவேத்தியத்தை படைத்துவிட்டு பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலையை சாற்ற வேண்டும்.
அதன் பின்னர், சொம்பில் நாமம் போட்டு பச்சரிசி மற்றும் சில்லறை நாணயங்களை நிரப்ப வேண்டும்.
துளசி தீர்த்தம் :
துளசி தீர்த்தம் வைக்கின்ற பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் துளசியை சேர்த்துக்கொண்டு மேலும் வெற்றிலை, பூ, பாக்கு, பழம், தேங்காயும் வைக்க வேண்டும்.
மாவிளக்கு ஏற்றல் :
புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது சிறப்பானது. தேங்காய் உடைத்து, தூப தீபங்கள் காண்பித்து, மாவிளக்கேற்றி, சாம்பிராணி, கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும்.
குறிப்பாக இதை செய்யும் போது கோவிந்தா.. கோவிந்தா.. என கூறி பெருமாளை வழிபட வேண்டும்.
குறிப்பு :
இந்த விரதத்தை முடிக்கின்ற வரை விரதம் இருப்பது நல்லது.
சனிக்கிழமை மதியம் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை எமகண்டம். எனவே, 1.30 மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும்.
காக்கைக்கு உணவு வைத்துவிட்டு நீங்கள் சாப்பிடலாம். மேலும், அன்னதானம் வழங்குவது மிக மிக சிறப்பான பலன்களை கொடுக்க கூடியது. இதன் மூலம் பெருமாளின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறலாம்.
English Summary
purattasi vazhipadu for govindhan 2022