செஸ் ஒலிம்பியாட் தொடர் நிறைவு விழா, நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!
Traffic Changed Tomorrow in Chennai
சென்னையை அடுத்த மாம்மல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி கோலாக்கலாமாக தொடங்கியது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், நாளை இந்த போட்டியில் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது அதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 9-ந்தேதி (நாளை) மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அன்றைய தினம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்டிரல் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதன்படி தேவை ஏற்பட்டால் மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதே போன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்டிரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம்.
எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Traffic Changed Tomorrow in Chennai