தாழ்வு மனப்பான்மை... உங்கள் வெற்றிக்கு முட்டுக்கட்டையா இருக்கா?
Inferiority complex
தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மையாகும்.
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்றே தம்மை பற்றி கருதுவார்கள்.
இன்றைய சமுதாய மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பெரிதாக வளர்ந்து நின்று அவர்களது முன்னேற்றத்திற்கும், செயல்பாட்டிற்கும் முட்டுக்கட்டை போடுவது தாழ்வு மனப்பான்மையென்னும் தடைக்கல்லே ஆகும். அந்த வகையில் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்கள் :
மூத்தோர்களை காரணமாக குறிப்பிடலாம். தங்கள் முன்னோர்கள், தங்களை மட்டுமே மனதில் கொண்டு அடுத்தடுத்து வரும் சந்ததியினரின் அறிவையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு, போதிய கல்வியறிவையும், பொது அறிவையும் வளர்க்க தவறுவதால் தங்களின் வாரிசுகள் மனதில் தாழ்வு மனப்பான்மை விஷம் தாராளமாக பரவுவதற்கு அவர்களே காரணமாகின்றனர்.
பொருளாதார சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு குற்ற உணர்வும், தாழ்வுணர்ச்சியும் இயற்கையாகவே வந்து விடுகின்றது.
தவறுகள் என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது, தன்னை தவிர யாருமே தவறு செய்வதில்லை, தான் எது செய்தாலும் தவறாகவே முடிகின்றது என்று நினைத்துக்கொண்டு, அந்த தவறுகளின் தாக்கத்தினால் அடுத்த அடி எடுத்து வைப்பதில் ஏற்படும் சஞ்சலங்களும், தயக்கங்களும் தாழ்வு மனப்பான்மை குணம் பிறக்க வழி வகுக்கின்றன.
மற்றவர்களைவிட நாம் குறைந்த அளவே படித்திருக்கின்றோம். அதனால் நம் கருத்துக்களும், செயல்பாடுகளும் நிச்சயம் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்காது என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.
தயக்கத்தை போக்கும் வழிமுறைகள் :
எந்தெந்த சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராய வேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வரும் போது எப்படி தயக்கமின்றி செயல்படுவது என்பதை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
பொருளாதார நிலைமைகளை பொருட்படுத்தாத உயரிய எண்ணங்களையும், செயல்களையும் அதன் போக்கில் செல்ல வழி விடும்போது தாழ்வு மனப்பான்மை இருக்காது.
பிறருடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஈடுபாடுகளும் இருக்கும்.
பிறருடன் பேசும் போதுதான் உங்களை பற்றியும், பிறரை பற்றியும் தெரிந்துக்கொள்ள முடியும். இதனால் குறையும், நிறையும் கலந்ததுதான் மனித இயல்பு என்பதை புரிந்து கொள்வீர்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் போகும்.
வேலை செய்யுமிடத்தில், கூட்டமைப்புகளில் மற்றும் சமுதாய சங்க அமைப்புகளில் சேர்ந்து பங்கேற்றால் தயக்கம் குறையும்.
எல்லா சூழ்நிலைகளிலும் நாம் செய்கின்ற காரியங்களும் சரி, செய்ய போகின்ற காரியங்களும் சரி, நமது திறமைக்கும், அறிவுக்கும் மிகச்சாதாரணமானவை என்ற எண்ணம் அவ்வேலையை சுலபமாக்கி விடுவதோடு, தாழ்வு மனப்பான்மையையும் குழி தோண்டி புதைத்து விடுகின்றன.
சிலருக்கு பள்ளியில், குடும்ப சூழ்நிலையில், வேலை செய்யுமிடத்தில் அதிகப்படியான தயக்கத்தை உண்டு பண்ணும் மனிதர்கள் இருப்பார்கள். இவ்வாறு இருக்கும்போது வேலை மற்றும் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளலாம்.
எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்த செயலை பலமுறை செய்து பார்த்தால் தயக்கம் இருக்காது. திரும்ப திரும்ப செய்யும் பயிற்சி ஒன்று தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும்.