ஊர்க்காவல் படை தேர்வு வழக்கு..15 மதிப்பெண்களுக்கான கேள்வி முறைகேடாக கேட்கப்பட்டது உறுதி!
Home Guard Selection Case Question for 15 marks confirmed to have been asked inappropriately!
ஊர்க்காவல் படை தேர்வு கேள்வித்தாள் முறைகேடு வழக்கில் கேள்வித்தாளில் 15 மதிப்பெண்களுக்கான கேள்வி முறைகேடாக கேட்கப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கூறுகையில்:புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த ஊர்க்காவல் படை தேர்வில் தேர்வு அறிவிக்கப்பட்ட அறிவிப்பானையில் கொடுக்கப்பட்ட பாட முறைகளுக்கு மாறாக ஆங்கில மொழிப்பாட கேள்வியை பொது அறிவு கேள்வி என கூறியதற்கு எதிராக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு மனு இன்று நீதி அரசர் சுப்பிரமணியன் அருள் முருகன் இருவர் அமர்வு முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அறிவிப்பாணையில் கேட்கப்பட்டதை தாண்டி கூடுதலாக ஆங்கில மொழி பாடத்தில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்பட்டதோடு அதனை பொது அறிவு கேள்விகள் என புதுச்சேரி அரசு கூறிவந்தது இதற்கு எதிராக நடந்த விசாரணையில் நீதியரசர்கள் இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை முறைகேடாக கேட்கப்பட்டதாக உறுதி செய்தனர்.
மேலும், ஆங்கில மொழிப்பாட தேர்வு பொது அறிவு தேர்வாக ஏற்க முடியாது என்பதையும் உறுதி செய்தனர், இருந்தபோதும் அரசு தரப்பில் தேர்ச்சி பட்டியலில் வெளியான 463 பேர் பணியில் இருக்கக்கூடிய காரணத்தினால் தேர்வை ரத்து செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதனால் நீதியரசர்கள் 15 மதிப்பெண்களை ரத்து செய்து 85 மதிப்பெண்களை உறுதி செய்து தேர்ச்சி பட்டியலை வெளியிட ஆணை பிறப்பித்தனர். மேலும் அந்த தேர்ச்சி பட்டியலில் கூடுதலாகவோ அல்லது குறைத்தோ 15 மதிப்பெண்கள் வழங்கி ஆறு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தேர்வு நடந்து முடிந்த மறுநாளே தேர்வு கட்டுப்பாட்டு குழுவுக்கு எமது அமைப்பு 15 மதிப்பெண்களை ரத்து செய்து 85 மதிப்பெண்களை 100% ஆக்கி தேர்ச்சி பட்டியலை வெளியிட கோரிக்கை வைத்தோம் ,ஆனால் சர்வாதிகாரம் படைத்த தேர்வு கட்டுப்பாட்டு குழு அதனை ஏற்க மறுத்து தேர்ச்சி பட்டியலை வெளியிட்டது. இதன் வாயிலாக தேர்ச்சி பட்டியலில் வெற்றி பெற்றதாக கருதப்பட்டவர்கள் மூன்று மாத காலம் காவல்துறையின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றுள்ளனர், இத்தகைய சூழலில் அரசு தரப்பு தான் செய்த தவறுக்கு சரியான தீர்வு காணாமல் 85 மதிப்பெண்ணுக்கு முடிவெடுக்க இன்று அறிவித்தது அதிர்ச்சி அளித்தது. இதனால் தற்பொழுது பயிற்சியில் உள்ள பலர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேர்வு நடந்த அன்றே இத்தேர்வில் கேள்வித்தாள் முறைகேடு நடந்துள்ளது என எடுத்துக் கூறியும் 85 மதிப்பெண்களுக்கு விகிதாச்சாரம் அமைத்து தேர்ச்சி பட்டியலை வெளியிட எமது வலியுறுத்தியும் அதற்கு செவி மடிக்காமல் தேர்வு கட்டுப்பாட்டு குழு செய்த தவறால் இன்று பல இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
எமது அமைப்பு முதல் நாள் வைத்த கோரிக்கை 7 மாத கால நீதி போராட்டத்திற்கு பின்பு இன்று நீதி அரசர்களால் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் காலம் கடந்த நீதி இன்று பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை நினைத்து வருந்துகிறோம்.
அரசு தேர்வு கட்டுப்பாட்டு குழு செய்த தவறுக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்தவர்களும் வழக்காடிகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும் பாதிப்படைவது என்பது எவ்விதத்தில் சரி என்ற கேள்வியை எமது அமைப்பு முன் வைக்கிறது.
இதனால் வரை இவ்வழக்கை விசாரணை செய்த எட்டு நீதி அரசர்கள் இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் முறைகேடானது என்பதனை உறுதி செய்துள்ளனர், இத்தேர்வு மட்டும் இல்லாமல் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல தேர்வுகளில் இதே போன்ற முறைகேட்டை செய்துள்ளனர். நீதிமன்றம் முறைகேட்டை உறுதி செய்துள்ளதால் அரசு பணியாளர் தேர்வு கட்டுப்பாட்டு குழு சார்ந்த அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசு பணியாளர் நியமன தேர்வு கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகளை அப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பால் பாதிக்கப்படும் அனைவருக்கும் உரிய தீர்வை அரசு எடுக்க வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
English Summary
Home Guard Selection Case Question for 15 marks confirmed to have been asked inappropriately!