வலங்கைமான் பாடைக்காவடி திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.!
valangaiman padaikavadi festival
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வரதராஜம் பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா மாாரியம்மன் கோவிலில் உள்ள 'சீதளாதேவி' அம்மனை வழிபட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதைத் தொடர்ந்து, பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (16-ந்தேதி) 2-ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வெள்ளி அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சகல விதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் பூரணநலம் பெற வேண்டி அம்மனை வேண்டிக் கொள்வர். பின்னர், உடல் நலம் குணமடைந்ததும், பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இதேபோல், குழந்தைபேறு இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொட்டில் காவடி எடுத்தும், அவரவர்களின் வழக்கப்படி ரதக்காவடி, அலகுக்காவடி, பக்க அலகு காவடி, பால் அலகுக்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த விழாவைக் காண டெல்டா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிதிரண்டு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
English Summary
valangaiman padaikavadi festival