அரசு அதிகாரி போல் நடித்து நகை பறித்த வாலிபர்கள் - போலீசார் அதிரடி.!
two peoples arrested for gold robbery in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, உளுந்தூர்பேட்டை அருகே எறையூர்பாளையம் பகுதியில் இரண்டு நபர்கள் வீடு வீடாகச் சென்று தங்களை அரசு அதிகாரிகள் என்றும், கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களிடம் ஆய்வு நடத்துவதற்காக வந்துள்ளதாகவும் கூறி விசாரித்துள்ளனர்.
அதன் படி அவர்கள் அப்பகுதியில் உள்ள சரோஜா என்பவர் வீட்டிற்கு சென்று கலைஞர் உரிமைத் தொகை உங்களுக்கு வருகிறதா எனக் கேட்டுள்ளனர். அதற்கு சரோஜா தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அவரது குடும்ப அட்டையை கொண்டு வரச் சொல்லி அதிகாரிகள் போல் பேச்சு கொடுத்துள்ளனர்.பின்னர் சரோஜாவை போட்டோ எடுக்க உள்ளதாகவும், அதனால் அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்துவிட்டு ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.
உடனே அதே இடத்தில் சரோஜா நகைகளை கழற்றி வைத்துவிட்டு வீட்டிற்குள் ஆதார் அட்டையை எடுக்கச் சென்றுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சரோஜா மீண்டும் வருவதற்குள் அவர் கழற்றி வைத்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சரோஜா அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் கடலூர் அண்ணாநகர் கேப்பர் மலை சாலையில் உள்ள ஷாஜகான் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த தங்க நகைகள், இருசக்கர வாகனம், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for gold robbery in kallakurichi