நவீன தொழில்நுட்பத்துடன் கருணாநிதி நினைவிடம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.!
karunanithi memorable place open today in chennai merina beach
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
அதாவது, கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கருப்பு நிற மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சமாதியின் மேல் உள்ள மூன்று வளைவுகளில், வியட்நாம் வெள்ளை கற்கள்; தரை முழுதும் ஜெய்ப்பூர் மார்பிள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தின் இரண்டு பகுதிகளிலும், நான்கு சுரங்க பாதைகள் உள்ளன. இந்த சுரங்க பாதைக்குள் சென்றால், 20,000 சதுர அடி பரப்பளவில், பூமிக்கடியில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு, மூன்று திரைகளை இணைத்து தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு வீடியோ, 21 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இரண்டாவது தியேட்டரில், கருணாநிதி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்களும் ஒளிபரப்பு செய்யப்படும்.
மூன்றாவது திரை சென்னை - திருவாரூர் செல்லும் மன்னை ரெயில் போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 7டி தொழில்நுட்பத்தில், கருணாநிதி கடந்து வந்த பாதை, அவரது திட்டங்கள் குறித்து விளக்கப்படுகின்றன. ரயிலில் பயணிப்பது போன்ற அனுபவத்தை, இந்த தியேட்டர் அளிக்கிறது.
‘டிவி’யில் தெரியும், கருணாநிதி உருவத்தின் முன் அமர்ந்து கேள்வி கேட்டால், பதில் சொல்லும் வசதியும் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி எழுதிய புத்தகங்களை பதிப்பித்த பல்வேறு பதிப்பகத்தாரின் விற்பனை மையமும் உள்ளது. நினைவிடத்தின் பின்பகுதியில், மெரினா கடலை ரசிக்கும் வகையில், பிரமாண்டமான பார்வையாளர் மாடம், இருக்கைகள், பூச்செடிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. கருணாநிதி சமாதியில், சூரியன் ஒளிர்வது உள்ளிட்ட லேசர் வசதியும் உள்ளது.
English Summary
karunanithi memorable place open today in chennai merina beach