தமிழக முழுவதும் மே 20ல் பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்..!! அண்ணாமலையும் பங்கேற்பு..!!
Demonstration by BJP womens wing on May20 across TamilNadu
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் வரும் மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. இவ்வாறு கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசு பல வழிகளில் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதோடு இந்த வழக்கிற்கான விசாரணை அதிகாரிகளையும் சிபிசிஐடி நியமித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிவித்துள்ளார்.
English Summary
Demonstration by BJP womens wing on May20 across TamilNadu