9 மாத குழந்தை உள்பட 3 பேர் பலி! விடியா திமுக அரசு அலட்சியம் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
Trippur Fire Accident ADMK EPS Condemn to DMK Govt
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது நடந்த வெடி விபத்தில் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மேலும் விபத்து நடந்த வீட்டில் இருந்த சுமார் 50 கிலோ வெடி மருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை விடியா திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?
விடியா திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.
தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விடியா திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Trippur Fire Accident ADMK EPS Condemn to DMK Govt