சிவகங்கையில் மக்களால் சூறையாடப்பட்ட மதுக்கடை! மதுக்கடையை மூட அன்புமணி வலியுறுத்தல்!
Common people attacked tasmac in sivagangai
சிவகங்கை மாவட்டம், அகிலாண்டபுரம் மதுக்கடை சூறையாடல் பொதுமக்கள் கொந்தளிப்பின் சிறு வெளிப்பாடு எனவும் மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை மூடவேண்டும் எனவும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "சிவகங்கை மாவட்டம், அகிலாண்டபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு சிலர் தாறுமாறாக ஓட்டிய வாகனம் மோதி அப்பகுதியின் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதை கண்டித்து உயிரிழந்தவரின் உடலுடன் அப்பகுதி பெண்கள் நடத்திய போராட்டத்தில் சர்ச்சைக்குரிய மதுக்கடை சூறையாடப்பட்டுள்ளது.
பெண்களின் இந்த போராட்டத்தை வன்முறையாக பார்க்கக்கூடாது, மதுவால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் கொந்தளிப்பு மற்றும் மனக்குமுறலின் வெளிப்பாடாகவே பார்க்கவேணடும். பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும
அகிலாண்டபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும், சட்டம் ஒழுங்கு சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்த மதுக்கடையை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை போராடியும் பயனில்லாததன் விளைவாகவே பெண்கள் கொந்தளித்துள்ளனர்
தமிழ்நாட்டில் அனைத்து வகையான கேடுகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. மதுக்கடைகள் மூடப்படாவிட்டால் இதே போன்ற நிகழ்வுகள் மேலும் பல இடங்களில் நடக்கக்கூடும். எனவே மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை அரசு உடனடியாக மூடவேண்டும்.
அகிலாண்டபுரத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Common people attacked tasmac in sivagangai