செந்தில் பாலாஜி மோசடி வழக்கு - மேலும் 50 பேருக்கும் சம்மன்.!
samman send to 50 peoples for senthil balaji case
கடந்த 2011-15-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர்.
இதேபோல், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று வழக்குகளில் ஒரு வழக்கில் 14 பேரும், ஒரு வழக்கில் 23 பேரும், மற்றொரு வழக்கில் 2 ஆயிரத்து 202 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முதல் நபராக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, செந்தில்பாலாஜி தொடர்புடைய ஒரு வழக்கில் 2,202 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் 100 பேர் வீதம் நேரில் அழைத்து குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று அறிவித்த நீதிபதி, முதல்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். இதற்கு முன்னதாக சம்மன் அனுப்பப்பட்ட 100 பேரில் சிலர் ஆஜராகாததால் அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
English Summary
samman send to 50 peoples for senthil balaji case