பேராசிரியர் நிர்மலா தேவிக்கான தண்டனை இன்று அறிவிப்பு.. பரபரக்கும் நீதிமன்றம்.!!
Srivilliputhur court pronounced punishment for Nirmala Devi today
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் பயிலும் மாணவிகளை தவறான வழியில் வழிநடத்த முயற்சி செய்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர்.
அதன் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். அதேபோன்று மாணவிகள் ஐந்து பேரும் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்தனர். அதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பகவதி அம்மாள் நேற்று வழங்கினார். அதில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அதேவேளையில் இந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிபதி அவருக்கான தண்டனையை இன்று (ஏப்ரல் 30) பிற்பகல் 2:30 மணிக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். நேற்று நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவர் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Srivilliputhur court pronounced punishment for Nirmala Devi today