தீபாவளி பண்டிகை எதிரொலி!...ஆவின் இனிப்பு விற்பனையை 20 % அதிகப்படுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்!
Diwali festival reverberation minister rajakannapan instructed to increase the sale of sweets by 20 percentage
சென்னை நந்தனத்தில் ஆவின் இல்லம் இயங்கி வரும் நிலையில், இங்கு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள், துணை பதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குதல், தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் நிதி நிலைமையை வலுவாக்குதல், பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையிலான சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குதல், பாலின் தரத்தை உறுதி செய்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
மேலும், ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்த போது, கடந்த 15-ம் தேதி 16 லட்சம் லிட்டரும், 16-ம் தேதி 16.50 லட்சம் லிட்டரும் பால் விற்பனை செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள், துணை பதிவாளர்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Diwali festival reverberation minister rajakannapan instructed to increase the sale of sweets by 20 percentage