நீதிமன்ற உத்தரவையும் மீறி.. "கனிம வளத்தை சுரண்டும் திமுக எம்எல்ஏ".. குமுறும் சிவாயம் கிராம மக்கள்..!!
DMK MLA Palaniyandy conducting mines in Karur with court order violence
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சொந்தமான மூன்று கல்குவாரிகள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் எனும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு குவாரி பழனியாண்டி பெயரிலும் மற்ற இரண்டு குவாரிகள் நவமணி மற்றும் மதிவாணன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பழனியாண்டிக்கு சொந்தமான 2.34 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வந்தார்.
குத்தகை உரிமம் 2019 ஆம் ஆண்டுக்கு முடிவடைந்த நிலையில் அதன் பிறகு கனிம வளங்கள் சட்டவிரோதமாக அனுமதி இன்றி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி 45 மீட்டர் அளவு வரை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் கல்குவாரியில் சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டதும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 45 மீட்டர் ஆழம் வரை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பழனியாண்டி மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை வழங்கியது.
இந்த வழக்கு தென்மண்டல தீர்ப்பாயம் வரை சென்ற நிலையில் பழனியாண்டியின் கல்குவாரிக்கு ரூ. 23 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று மதிவாணன் பெயரில் உள்ள கல்குவாரிக்கு 7 கோடி ரூபாயும் விதைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு திமுக எம்எல்ஏ பழனியாண்டி அனுமதியின்றி தற்பொழுது வரை கல்குவாரி நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. மேலும் நவமணி என்பவர் பெயரில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு தற்பொழுது வரை வரி செலுத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள திமுக எம்எல்ஏ பழனியாண்டி குவாரியில் எந்தவித விதிமுறைகளும் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் குடியிருப்பு பகுதிக்கு அருகே கல்குவாரி நடத்துவதாக சிவாயம் கிராம மக்கள் குமுறுகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
English Summary
DMK MLA Palaniyandy conducting mines in Karur with court order violence