முயற்சிகள் முளைக்கட்டும்... வெற்றிகள் பதியட்டும்...! தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! - பொதுச் செயலாளர் EPS
Happy Tamil New Year wishes by General Secretary EPS
ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது,"தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.
'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
மலர இருக்கும் 'விசு வாவசு' ஆண்டில், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறையட்டும், எண்ணங்கள் ஈடேறட்டும், முயற்சிகள் முளைக்கட்டும், வெற்றிகள் பதியட்டும், புன்னகை பூக்கட்டும், மன நிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக அமையட்டும் என மனதார வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது இதயமார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Happy Tamil New Year wishes by General Secretary EPS