திருச்சி திமுகவில் களேபரம்.. குவாரியில் தவறு நடந்ததால் பைன்.. பழனியாண்டிக்கு கே.என் நேரு பதிலடி.!!
KN Nehru said penalty imposed to palaniandi quarry by govt officials
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் சொந்தமாக கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் குவாரிக்கு 23 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த அபராத பின்னணியில் அமைச்சர் நேரு இருப்பதாக சந்தேகிக்கும் பழனியாண்டி அவரின் அறிவுறுத்தல் படி தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பேசிய ஆடியோ வெளியாகியானது. அதில் நான் சாதாரண எம்எல்ஏவாக இருந்தாலும் கே.என் நேருவை விட அதிகமான சம்பாதிப்பதால் பொறாமை. அதனால் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. திருச்சி திமுக அரசியலில் போட்டியில் அண்மையில் திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக நின்றவர் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி.
அமைச்சர் நேரு தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சிப் பஞ்சாயத்தை கட்சித் தலைமை அறிவுறுத்தலின் படி முதன்மைச் செயலாளர் என்கிற முறையில் சுமூகமாக பேசி முடித்து தீர்வு கண்டு வருகிறார். இதனாலேயே திமுகவினர் இவரை நாட்டாமை என அழைப்பதுண்டு.

இப்படி ஊருக்கே பஞ்சாயத்து செய்து வரும் அவருக்கு திருச்சியில் புது பஞ்சாயத்து ஏற்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. திருச்சி திமுக அமைச்சர் மற்றும் எம்எல்ஏ இடையேயான பனிப்போர், மேயர்கள் கவுன்சிலர்கள் இடையேயான மோதலால் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என அறிவாலய வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து பழனியாண்டிக்கு அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி தந்துள்ளார். அப்போது பேசிய அவர் "கட்சியினரையும், என்னை சுற்றி உள்ளவர்களையும் வளர்த்துவிட்டு தான் எனக்கு பழக்கம். யாரையும் அழிக்க நினைத்ததில்லை. எம்.எல்.ஏ பழனியாண்டியின் குவாரியில் தவறு நடந்துள்ளது தெரிய வந்ததால் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
English Summary
KN Nehru said penalty imposed to palaniandi quarry by govt officials