விசிக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - வரிந்துகட்டி வந்த சீமான்!
VCK Woman Attacked TN Police DMK Govt NTK Seeman
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவியை பெண் என்றும் பாராமல் திமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாக கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சிஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாரயம் விற்பவர்களை, கஞ்சா கடத்துபவர்களை, பள்ளிக்குழந்தைகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றச்செயலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க திறனற்ற தமிழ்நாடு அரசின் காவல்துறை அப்பாவி பொதுமக்களைத் தாக்குவது என்பது அப்பட்டமான எதேச்சதிகாரப்போக்காகும்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகமாகி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பேராபத்தான சூழல் நிலவுகிறது.
சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்து, பெண்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு காவல்துறை, தன் பங்கிற்கு ரௌடிகளை போல பெண்களைத் தாக்குவதென்பது வெட்ககேடானதாகும்.
கூட்டணி கட்சியின் பெண் மாவட்டச்செயலாளருக்கு நேர்ந்துள்ள இக்கொடுமைக்கு
காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில்கூறப்போகிறார்? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? சமத்துவமா? இதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
ஆகவே, தமிழ்நாடு அரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் டிலைட்டா ரவியை தாக்கிய காவல்துறையினரைப் பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடரா வண்ணம் காவல்துறைக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
VCK Woman Attacked TN Police DMK Govt NTK Seeman