கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய தசரா திருவிழா.!
flag hoisting for thasara festival in kulasai muththaramman temple
கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய தசரா திருவிழா.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த திருவிழா இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்ததாக இங்குதான் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து காளி வேடம் அணியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து இன்று அதிகாலை ஐந்து மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அதன் பின்னர், காலை 9.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்பட்டது. தசரா விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளித்து, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இந்த நிலையில், குலசை தசரா திருவிழாவில் போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை உள்ளிட்ட வேடங்கள் அணிய இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
English Summary
flag hoisting for thasara festival in kulasai muththaramman temple