CSI பிஷப் தாக்கப்பட்ட விவகாரம்.. திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு.!!
Case filed against DMK MP Gnanathiraviyam in CSI Bishop assault case
திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த ஞானதிரவியத்தை நெல்லை மாவட்ட சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் கல்வி நிலை குழு செயலாளர் மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கி பேராயர் பர்ன்பாஸ் உத்தரவிட்டார். ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நேற்று நெல்லை மாவட்ட சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை பூட்டியதோடு வேற யாரும் உள்ளே நுழையக் கூடாது என அலுவலகத்தின் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் அலுவலகத்திற்குச் சென்றார்.
அப்பொழுது அவரை தடுத்து நிறுத்திய திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதோடு அடித்து ஓட விட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் முன்பே இந்த தாக்குதல் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிஷப் காட்பிரே நோபல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்த பிஷப் காட்பிரே நோபல் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தன்னையும் கிறுத்துவ திருச்சபை உறுப்பினர்களையும் கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நெல்லை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது திமுக எம்.பி ஞானதிரவியம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக உள்ளதாக நெல்லை மாவட்ட திமுக உடன்பிறப்புகள் முனுமுனுக்கின்றனர்.
English Summary
Case filed against DMK MP Gnanathiraviyam in CSI Bishop assault case