பலூனால் பறிபோன குழந்தையின் உயிர் - தஞ்சாவூரில் பரபரப்பு.!
child died for swallowed balloon in thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் - சிவகாமி தம்பதியினர். இவர்களது 7 மாதம் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், இந்தக் குழந்தைக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் குழந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த பெற்றோர் சந்தேகத்தின் பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது.
அதை அகற்றிய மருத்துவர்கள், பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
child died for swallowed balloon in thanjavur