தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை - முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்த குழு!
Tamilnadu State Education Policy
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து, மாநிலக் கொள்கையை உருவாக்க 2022ம் ஆண்டு குழு அமைக்கப்பட்ட நிலையில், இந்த குழு இன்று அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது உள்ளது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தன.
மேலும் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்றும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க தமிழக அரசால் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 18 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான இந்த குழு கடந்த இரண்டு வருடமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தகவல்களை சேகரித்து வந்தது.
இந்நிலையில், இன்று 600 பக்கங்கள் கொண்ட தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு வழங்கி உள்ளது.
இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் சில முக்கியமானவைகள் பின்வருமாறு:
* மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை.
* தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை பள்ளிகளில் தொடர வேண்டும்.
* 5 வயது பூர்த்தியானவர்கள் 1ம் வகுப்பில் சேரலாம்
* பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகப் பள்ளிகளில் தொடர வேண்டும்.
* 12 ஆம் வகுப்பு பொதுப்பெண் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கக்கூடாது. பதிலாக பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கூடாது என்றும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது,
English Summary
Tamilnadu State Education Policy