பாலியல் புகாரில் சிக்கிய 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியல் தயார் - அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு!
TNGovt School Teachers Harass case
தமிழக பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, பணியாளர் விதிகளில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, குழந்தைகள் நல ஆணையம் மற்றும் காவல்துறையுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய விதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வேலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அரசு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடைமுறைகளை மேலும் கடுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தற்போது, பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், அவர்கள் சில நாள்களில் ஜாமீன் பெற்று விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில், புதிய விதிகளின்படி, குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 200 ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TNGovt School Teachers Harass case