மியன்மார்-தாய்லாந்து பூகம்பம்; பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் அச்சம்; உதவி செய்ய தயாரான நாடுகள்..!
Myanmar and Thailand earthquake Death toll will exceed 10 thousand US Geological Survey information
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், இன்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 04 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்( யு.எஸ்.ஜி.எஸ்.) கணித்துள்ளது. இரண்டு நாட்களில் 07 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 03 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மியான்மருக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக, பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மியான்மர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் காரணமாக அந்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி உள்ள ராணுவ அரசு, சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில், ' ஆபரேஷன் பிரம்மா' நடவடிக்கை மூலம் இந்தியா உதவ முன்வந்துள்ளது. அந்நாட்டிற்கு 118 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இத்துடன் தேடுதல் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட குழுவினரும் விரைந்துள்ளனர். விரைவில் நிவாரண உதவிகளுடன் ராணுவ கப்பல் மியான்மர் கிளம்ப உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதனையடுத்து, மியான்மருடன் உள்ள நீண்ட கால நட்புறவில் உள்ள சீனா 37 பேர் கொண்ட நிவாரண மற்றும் மீட்பு குழுவை அனுப்பிவைத்துள்ளது. அந்நாட்டிற்கு உதவி செய்ய முதல் நாடாக சீனா குழுவை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினர் உயிருடன் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் கருவிகள், பூகம்பம் எச்சரிக்கை சாதனம், டுரோன்கள், சிசிடிவி உள்ளிட்டவற்றை கொண்டு சென்றுள்ளனர்.

இந்த துயரத்திற்கு இரங்கல தெரிவித்து உள்ள ரஷ்ய அதிபர் புடின், நிவாரண பொருட்கள் மற்றும் மீட்புக்குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். மியான்மர் பூகம்பத்தை மோசமானது எனக்கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டிற்கு உதவி செய்ய தயாராகவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளும் 27 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்தவதாக அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, தென் கொரியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உதவ முன்வந்து உள்ளன.
English Summary
Myanmar and Thailand earthquake Death toll will exceed 10 thousand US Geological Survey information