கர்நாடகாவில் கொடூரம்: ஆசிரியர் தாக்கியதில் 4ஆம் வகுப்பு மாணவன் பலி.! போலீசார் வலைவீச்சு
4th class student killed in teacher assault in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ஹட்லி பகுதியை சேர்ந்தவர் கீதா(34). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பரத்(9) அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று அதே பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணிபுரியும் முத்தப்பா என்பவர் பரத் சரியாக படிக்கவில்லை என்று திட்டியுள்ளார். மேலும் சிறுவனை கடுமையாக தாக்கி அவனைக் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து தள்ளிவிட்டுயுள்ளார்.
இதனால் மேலே இருந்து கீழே விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்தான். இதைப்பார்த்த சிறுவனின் தாய் உட்பட ஆசிரியர்கள் முத்தப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். ஆனால் அப்பொழுது முத்தப்பா சிறுவனின் தாய் உட்பட இரண்டு பேரை கடுமையாக தாக்கியதில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து முத்தப்பா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள், சிறுவன் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாரத் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மேலும் சிறுவனின் தாய் மற்றும் மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் தாய்க்கும் முத்தப்பாவுக்கும் முன்விரோதம் இருந்ததால், முத்தப்பா சிறுவனை கடுமையாக தாக்கியதும், அதனால் சிறுவன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தலைமறைவான முத்தப்பாவை பிடிப்பதற்கு தனி படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
4th class student killed in teacher assault in Karnataka