ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி மோசடி! 7 பேர் கைது!
Crore fraud in online trading 7 people arrested
இந்தியாவின் பல இடங்களில் போலி கால் சென்டர்கள் நடத்தி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் 7 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கோகிலா (38) செவிலியர். பேஸ்புக்கில் ஆன்லைனில் டிரேடிங் செய்து லாபம் பார்க்கலாம் என தேடினார். அதில் வந்த விளம்பரத்தை பார்த்து, தனது முகவரி, தொலைபேசி எண்ணை பதிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கோகிலாவை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், 'குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன், அல்கோ மாஸ்டர் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்வதாகவும், தங்களின் ஏ.ஐ., தொழில்நுட்ப சாப்ட்வேர் மூலம் முதலீடு செய்தால், அதுவே டிரேடிங் செய்து தினமும் ரூ. 8000 வரை லாபம் அளிக்கும்' என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய கோகிலா, மர்ம நபர்கள் அனுப்பிய 67 லிங்க்குகள் மூலம் பல தவணைகளில் ரூ.18 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இதனால் லாப பணம் ஏதும் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் புகாரின்படி, மோசடி கும்பலின் வங்கி பரிவர்த்தனை, வாட்ஸ்ஆப், இணையதள முகவரிகளை ஆராய்ந்தனர். பின் மோசடி கும்பல் நெய்வேலி மற்றும் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று, அங்கு பதுங்கியிருந்த மோசடி கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
மேலும், அந்த கும்பல் கேரளாவை சேர்ந்த பிரவீன், 31; குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெகதீஷ், 36; பெங்களூரு தேவனாஹல்லியை சேர்ந்த முகமது அன்சர், 38; நெய்வேலி பகுதியை சேர்ந்த தவுபில் அகமது, 36; ராமச்சந்திரன், 32; ஆனந்த், 36; விமல்ராஜ், 34; என தெரிய வந்தது.
English Summary
Crore fraud in online trading 7 people arrested