கேரளாவை நடுநடுங்க வைத்துள்ள சம்பவம்; குடும்பத்தினர் 05 பேரை அடித்தே படுகொலை செய்த இளைஞர்..!
Kerala youth who murdered members of his family
கேரளாவில், 13 வயது தம்பி, பாட்டி, காதலி, அத்தை, மாமா என ஐந்து பேரை, 23 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் கேரளாவை நடுநடுங்க வைத்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பெருமலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபான், 23 வயது. இவரது தந்தை ரஹீம், வெளிநாட்டில் வசிக்கிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இவர் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில், கேரளா பாங்கோடு பகுதியில் உள்ள பாட்டி சல்மா பீவியின் வீட்டுக்கு சென்ற அபான், சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றுள்ளார். தொடர்ந்து, எஸ்.என்.புரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்று, மாமா லத்தீப், அத்தை ஷாஹிதா ஆகியோரையும் அடித்துக் கொன்றுள்ளார்.

அதனை தொடர்ந்து, பெருமலாவில் உள்ள தன் வீட்டுக்கு வந்த அபான், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது தம்பி அப்சான் மற்றும் காதலி பர்சானா ஆகியோரை சுத்தியலால் அடித்தே கொன்றுள்ளார். அப்சான் தாக்கியதில்,அவரது தாய் ஷெமி படுகாயம் அடைந்துள்ளார்.
இரண்டு மணி நேரத்தில் ஐந்து பேரை கொன்ற அபான், வெஞ்சாரமூடு போலீஸ் ஸ்டேஷனில் தானாக சரணடைந்தார். அப்போது, தம்பி, பாட்டி, காதலி உட்பட ஐந்து பேரை கொன்றதாக அவர் கூறியுள்ளார். மேலும், அவர் எலி மருந்து குடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அபான் அளித்த தகவலின்படி சம்பவ இடங்களுக்கு சென்ற போலீசார், ஐந்து பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும், உயிருக்கு போராடிய தாய் ஷெமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, இது தொடர்பாக அபானிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தந்தையின் கடன்களை தீர்ப்பது தொடர்பாக குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உறவினர்கள் உதவ மறுத்ததாகவும், இதனால், பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட ஐந்து பேரை அபான் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
English Summary
Kerala youth who murdered members of his family