ரெயில் பெட்டியில் அழுகிய ஆண் சடலம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
male body rescue in ganga cauvery express train box
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கடந்த 15-ந் தேதி கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது.
இந்த ரெயில் பயணிகளை இறக்கிவிட்டு, அத்திப்பட்டில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு சென்றது. 3 நாட்களாக பணிமனையிலேயே நின்றிருந்த ரெயில், பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் இரவு பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியது.
இதனால், சந்தேகமடைந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த, ரெயில்வே ஊழியர்கள் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
male body rescue in ganga cauvery express train box