புதுவை : இறந்த லட்சுமிக்கு அனுமதியில்லாமல் வைத்த சிலை அகற்றம் - பொதுமக்கள் மீது தடியடி.!
near puthuchery elephant statue remove
கடந்த மாதம் 30-ந் தேதி புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள யானை லட்சுமி நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.
இந்த சம்பவம் பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து லட்சுமியின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் வனத்துறை அலுவலகம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் தினமும் லட்சுமியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே யானை லட்சுமியின் நினைவாக அது உயிரிழந்த இடமான காமாட்சியம்மன் கோவில் வீதியில் கடந்த இரண்டாம் தேதி சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்த சிலை அரசு அனுமதியில்லாமல், தனிநபர் அனைவரும் சேர்ந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து "பொது இடத்தில் அனுமதியில்லாமல் சிலை வைக்க கூடாது. இங்கு சிலை வைப்பதற்கான எந்த அனுமதியும் இல்லை" என்று தெரிவித்தனர்.
அப்போது, சிலை வைத்தவர்கள் விரைவில் சிலையை எடுத்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் பத்து நாட்களுக்கு மேலாகியும் சிலை எடுக்கபடாமல் இருந்த நிலையில், நேற்று புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சிலையை அப்புறப்படுத்துவதற்காக வந்தனர்.
மேலும் அந்த இடத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அந்த இடத்திற்கு திரண்டு வந்து சிலையை அகற்றகூடாது என்று நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிலையை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட பொக்லைன் எந்திரம் மீது பொதுமக்கள் சிலர் கற்களை வீசி எறிந்தனர். இதனால் பொதுமக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அங்குள்ள கூட்டத்தை கலைத்தனர். அதன் பின்னர் நகராட்சி அதிகாரிகள் யானை சிலையை அகற்றி கொண்டு சென்றனர்.
அப்போது, பெண் ஒருவர் திடீரென யானை சிலையை கட்டிப்பிடித்து அங்கிருந்து எடுத்து செல்ல வேண்டாம் என்று கதறி அழுதார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
near puthuchery elephant statue remove