மகா கும்ப மேளா 2025; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய மத்திய உள்துறை அமைச்சர்..!
Union Home Minister takes holy dip in Triveni Sangam
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி மஹா கும்பமேளா நிகழ்வு தொடங்கியது. குறித்த நிகழ்வு அடுத்த மாதம் 26-ஆம் தேதி நிறைவடைகிறது.
இதனையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.
இதுவரை, 13.21 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், மஹா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டு உள்ளதாக உ.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தன் குடும்பத்தினருடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, தீர்த்தராஜ் பிரயாக் பகுதியில் துறவியருடன் இணைந்து திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடி வழிபட்டுள்ளார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்துள்ளார். மேலும், தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசியும் பெற்றுள்ளார்.

பிரயாக்ராஜ் வரும் முன், சமூக வலைதளத்தில் அமித் ஷா கூறுகையில், 'மஹா கும்பமேளா என்பது சனாதான கலாசார தத்துவத்தின் தனித்துவ அடையாளமாக விளங்குகிறது. கும்பமேளா, நம் வாழ்வின் தத்துவ நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது' என, குறிப்பிட்டுள்ளார்.
மஹா கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ், பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Home Minister takes holy dip in Triveni Sangam