மோடியும், அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும்! பிருந்தா காரத் கடும் விமர்சனம்!
Brinda Karat criticized Modi and Amit Shah should be ashamed
திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் "மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நூல் விலை, பஞ்சு விலை உயர்வால் ஆயத்த ஆடை தொழில் முடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெரிய நிறுவனங்களுக்கான வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் சிறு நிறுவனங்களின் கடன்கள் 90 நாட்களில் செலுத்தாவிட்டால் அதை வாரா கடனாக வைத்து அவர்கள் மீண்டும் கடன் பெற முடியாத நிலைக்கு பாஜக தள்ளிவிட்டது. மத்திய பாஜக அரசின் தோல்வியை மறைக்க அவர்கள் ஆளும் மாநிலத்தில் பாஜக நிர்வாகிகள் மக்களிடையே மதவாத உணர்வை தூண்டி விடுகின்றனர்.
இந்தியாவில் நாளொன்றுக்கு 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மோடியும் அமித்ஷாவும் ஏதாவது ஒரு சம்பவத்தில் சிறுபான்மையினர் ஈடுபட்டிருந்தால் அதை பெரிதுபடுத்தி அரசியலாக்குகின்றனர்.
குஜராத்தில் நடந்த பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை வாக்கு அரசியலுக்காக பாஜக அரசு விடுதலை செய்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Brinda Karat criticized Modi and Amit Shah should be ashamed