அதிமுக சார்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த ஓபிஎஸ்.!!
OPS tweet for Electricity
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன் தினம் அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 10 வருடங்களில் மின்சார துறையின் கடன் ரூபாய் 12647 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 42% மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இருக்காது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மின் கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளனர். மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயர்த்தவும், சிறு மற்றும் குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தவும், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தவும், இரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் உயர்த்தவும் உத்தேசித்துள்ளதாக, நேற்று மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் செயலாகும்.
இந்த மின்கட்டண உயர்வு முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
OPS tweet for Electricity