சீதாராம் யெச்சூரி மறைவு - தமிழக தலைவர்கள் இரங்கல்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று, சுவாச பிரச்சனை காரணமாக இன்று  உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

யெச்சூரி இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட்  உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும்  இரங்கல்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும், இந்திய அரசியலில் உயர்ந்த ஆளுமையுமான சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது;

சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதால், நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.

தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையை வடிவமைத்தது. 

அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.

மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது.

மாணவர் ஆர்வலரிலிருந்து ஸ்டேட்ஸ்மேன் வரையிலான அவரது பயணத்தில், அரசியலில் தனது அழியாத முத்திரையை பதித்தார். அவரது குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள்.  பிரியாவிடை தோழர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Condolence to CPIM Sitaram Yechury


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->