தாட்கோ தலைவராக நா.இளையராஜா நியமனம் - தமிழக அரசு!
TADGO new Head TNGovt
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பில், தாட்கோ 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாட்கோவின் கட்டுமானப் பிரிவு மூலம், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்காக தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேம்பாட்டுப் பிரிவு மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நா.இளையராஜா நியமிக்கப்பட்டு, இதற்கான அரசாணை (பி) எண்.110, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள்: 28.03.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.