பொம்மை முதலமைச்சருக்கு நிர்வாகத் திறன் என்பது துளியும் இல்லை; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!
The puppet Chief Minister has no administrative skills at all Edappadi Palanisamy criticizes
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கீழப்புலியூர் பகுதியில் குத்தாலிங்கம் என்பவர் தன் மனைவியின் கண்முன்னே மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதே போல், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இது குறித்து கவலை தெரிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில் பொது இடங்கள் எல்லாவற்றிலும் "இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல!" என்று பதாகைகள் வைக்கப்பட வேண்டும். என்ற அளவில்தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதல்வராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்! ஆனால் அவர்?
"தனிப்பட்ட பிரச்சனை", "குற்றவாளிகள் கைது" என்ற உங்கள் Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? "சட்டம்- ஒழுங்கு" என்பது கைது செய்வது மட்டுமல்ல; குற்றங்களைத் தடுக்க, குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.
இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும். ஆனால், இங்குள்ள பொம்மை முதல்-அமைச்சருக்கு நிர்வாகத் திறன் என்பதுதான் துளியும் இல்லையே? "குற்றவாளிகளின் கூடாரம்" என்ற நிலையில் இருந்து மாறி மீண்டும் "அமைதிப் பூங்கா" என்ற நிலைக்கு தமிழ்நாடு மாற, ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சி வீழ்ந்து, தமிழ்நாடு மாடல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது ஒன்றே வழி!
மேற்கூறிய குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The puppet Chief Minister has no administrative skills at all Edappadi Palanisamy criticizes