ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை.. சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை பேட்டி ..!!
Tn BJP Leader Annamalai Gives Interview About Armstrong Murder
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டு வாசலில் வைத்தே மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனிடையே இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை பலரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் அதுவும் மாநிலத் தலைநகரில் இது போலொரு சம்பவம் நடந்துள்ளது.
கொள்கை வேறு வேறாக இருந்தாலும் பாஜக ஆர்ம்ஸ்ட்ராங் கொலையை ஆதரிக்கவில்லை. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் அவரது வீட்டிற்கு அருகிலேயே படுகொலை செய்யப் பட்டுள்ளார். இதிலிருந்தே தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று தெரிகிறது.
நாங்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை கோரவுள்ளோம். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இதுகுறித்து புகாரளிக்க உள்ளோம். மேலும் வேங்கை வயல் சம்பவம் உள்ளிட்ட தமிழகத்தில் நடைபெற்ற 17 சம்பவங்கள் குறித்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்.
இங்கு ஒரு கொலை நடந்தவுடன் பெரிய குற்றவியல் வழக்கறிஞர் மூலம் குற்றவாளிகளை சமாதானப்படுத்தும் நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன. பட்டியலின மக்களுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சென்னை இப்போது கூலிப்படையின் தலைநகரமாக மாறிவிட்டது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் 5 பேர் எங்கள் கட்சியில் இருந்து நாளை காலை டெல்லி சென்று இந்த பிரச்சினை குறித்து பேசவுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tn BJP Leader Annamalai Gives Interview About Armstrong Murder