பொய்யை மட்டுமே பேசி அரசியல் செய்யுறாங்க - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
Udhaynithi stalin Condemn to BJP july
இன்று சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணியின் 45 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில்,
"திமுகவில் பல அணிகள் இருந்தாலும், எனக்கு முதல் அணி இளைஞரணி தான். திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் அணியும் ஒரு முக்கிய காரணம்.
சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை வரும் 2026லிருந்து தொடர நாம் உறுதி ஏற்போம். திமுக இளைஞர் அணியினர் சமூகவலைத்தளங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் சமூகவலைதள புதிய கணக்குகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எனவே, திமுக இளைஞர் அணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் இல்லம் தோறும் இளைஞர் அணி என்ற திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கிராம முதல் நகரம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை நாம் எடுத்து கூற வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழகத்திற்கு வந்தார். ஆனால் பிரதமர் மோடியின் இந்த வருகையை நிராகரித்துள்ள தமிழக மக்கள், 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.
பாஜக பொய்யை மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் தான் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் வதந்தி தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Udhaynithi stalin Condemn to BJP july