தினம் ஒரு திருத்தலம்... செம்பால் அபிஷேகம்.. சதுர்முகம்.!!
chinnalapatti murugan temple
அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில் :
திண்டுக்கல்லில் இருந்து சிறிது தொலைவில் கண்டாங்கி சேலைக்கு பெயர் பெற்ற சின்னாளப்பட்டி என்ற ஊரில், நான்கு முகங்களுடன் கூடிய பழமையான சதுர்முக முருகன் கோயில் உள்ளது. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சி தரும் ஒரே ஸ்தலம் இதுவாகும். இப்படி நான்கு முகங்களுடன் முருகக் கடவுளைத் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்.
கோயில் சிறப்பு :
மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவராக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
வலது கரத்தில் சங்கு முத்திரையும், இடது கரத்தில் சக்கர முத்திரையும் கொண்டவர். மார்பில், கௌரி சங்கரர் ருத்ராட்சம் சூடியுள்ளார்.
சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்" செய்வது இத்தலத்தின் சிறப்பு.
வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலவராகக் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி.
திருவிழா :
வைகாசி விசாகம், கந்த சஷ்டி 6 நாட்கள் திருக்கல்யாணம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள், ஆடி கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதந்தோறும் பூசம், கார்த்திகை, மிருகசீரிஷ நட்சத்திரம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி சிறப்பு பூஜைகள். இதுதவிர பிரதோஷம், சஷ்டி, வளர்பிறை அஷ்டமி பைரவர் பூஜை யாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
பிரார்த்தனை :
இத்திருத்தலத்திற்கு வந்து சதுர்முக முருகனை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை இல்லாத குறைகள் போன்ற சங்கடங்களை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தலத்து முருகனை வழிபட்டால், செவ்வாய்தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இங்கே உள்ள ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சாற்றி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும், ஞானமும் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீபைரவருக்கு தயிர்சாதம், வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், சத்ரு உபாதைகள் நீங்கும். செவ்வாய்க்கு அதிபதியான கந்தக் கடவுளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் துவரம்பருப்புடன் அச்சுவெல்லமும் கலந்து நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வீடு, மனை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
நேர்த்திக்கடன் :
முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.
English Summary
chinnalapatti murugan temple