சென்னை : ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! 3 பேர் கைது
1 crore worth gold seized in Chennai airport
சென்னை விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த ஒரு பயணி இடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த ரூபாய் 37.56 லட்சம் மதிப்புள்ள 770 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு விமானத்தில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு பேரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர்களது முதுகில் தங்க பசைகளை ஒட்டி கடத்தி வந்த ரூபாய் 73.28 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 502 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ரூ.1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
1 crore worth gold seized in Chennai airport