#BREAKING:: வாணியம்பாடியில் கோர விபத்து.. கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு..!!
3 school students killed in car accident in vaniyambadi
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்புகளை கடந்து சர்வீஸ் சாலையில் சென்றது.
அப்பொழுது வளையாம்பட்டு பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சர்விஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பள்ளி மாணவர்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் ரபீக், விஜய் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பயணித்துள்ளனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் தாக்கம் முயன்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரில் பயணித்த அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளையாம்பட்டு பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் நெடுஞ்சாலை துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வளையாம்பட்டு பகுதியில் பெயரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 school students killed in car accident in vaniyambadi