இப்படி வீண்பழி சுமத்துறீங்களே... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Annamalai Condemn to MKStalin And DMK For Cauvery issue
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அண்ணாமலையின் செய்திக்குறிப்பில், "காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது.
தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்?
உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai Condemn to MKStalin And DMK For Cauvery issue