இனி காவல்துறையை நான் தூங்கவிடமாட்டேன் - கொந்தளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை.!
bjp leader annamalai press meet after release police custody
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனைக் குற்றஞ்சாட்டி பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை அக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:-
"அடுத்த ஒருவாரத்திற்குள் தேதி குறிப்பிடாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டு பா.ஜ.க. போராட்டம் நடத்தும். அப்போது பா.ஜ.க. மகளிரணி முன்னிலையில் டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை சுத்தியலை கொண்டு ஆணி அடித்து ஒட்டப்போகிறோம்.
ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருநாள் பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளை மூடி பூட்டு போடப்போகிறோம். இந்த இரு போராட்டமும் அடுத்த 15 நாட்களுக்குள் இரு தேதிகளில் நடக்கும். வரும் 22ம் தேதி சென்னையில் ஒரு போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது. காவல்துறை பா.ஜ.க.வுக்கு மரியாதை கொடுக்காதவரை பா.ஜ.க.வும் காவல்துறைக்கு மரியாதை கொடுக்காது.
காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். தமிழ்நாட்டில் சீருடை அணிந்த போலீஸ்காரர்களுக்கு இனி தூக்கம் இருக்கக்கூடாது. இதை பா.ஜ.க. தொண்டர்களுக்கு கூறிக்கொள்கிறேன். விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டே இருக்கும். இன்று இரவு முதல் காவல்துறையை நான் தூங்கவிடமாட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
bjp leader annamalai press meet after release police custody