சென்னையில் ஏட்டய்யா காலை உடைத்த எஸ்ஐ! வட மாநில இளைஞர்களால் தாக்கிக்கொண்ட போலீசார்!
Chennai Police officers attacking each other
சென்னையில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, காலில் மாவுக்கட்டு போட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட்ராமன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. எஸ்.பி.சி.ஐ.டி பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இவர், தற்பொழுது அரசியல் கட்சி ஒன்றின் நிர்வாகிகளுடைய செயல்பாடுகளை கண்காணித்து தகவல் தெரிவித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் உரசிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.
இதனால் நிலை தடுமாறிய தலைமை காவலர், அவர்களை பின் தொடர்ந்து சென்று வடமாநில நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வழியே வந்த ஒருவர் எதற்காக சாலையில் நின்று இப்படி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என ஏட்டு பாலசுப்ரமணியை கேட்டுள்ளார். அந்த நபரிடம், நான் போலீஸ் என கூறி வட மாநில நபர்கள் மீது தான் தவறு இருப்பதாக கூறியுள்ளார்.
அதற்காக அந்த நபர் உங்களுடைய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கூறியதாகவும், எதற்காக உங்களிடம் காட்ட வேண்டும் என கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு நானும் காவலர் தான் சென்னை பெருநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரு போலீசாரும் சண்டையில் ஈடுபட்டிருந்ததை பயன்படுத்தி, அந்த இரு வட மாநில நபர்களும் தப்பி சென்று விட்டனர்.
இரு போலீசாரும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவரும் இச்சண்டையில் இணைந்துள்ளார். அந்த உதவி ஆய்வாளர் நுண்ணறிவு போலீசார் உடன் இணைந்து, எஸ்.பி.சி.ஐ.டி தலைமை காவலரை தரைக்குறைவாக பேசி, கீழே தள்ளிவிட்டு எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் தலைமை காவலர் காலில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது அவர் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் எஸ் பி சி ஐ டி தலைமை காவலரை தாக்கியது சென்னை வடக்கு மண்டல நுண்ணறிவு பிரிவு காவலர் மற்றும் பூக்கடை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் எனவும் தெரியவந்துள்ளது.
பாலசுப்ரமணியம் சீருடை இல்லாமல் இருந்ததும், அடையாள அட்டை காட்டாமல் இருந்ததும் தான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
English Summary
Chennai Police officers attacking each other