கோயம்பேடு இடத்தில் பெரிய பசுமைப் பூங்கா! பசுமைத்தாயகம் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம்!
Construct Green park at Koyembedu PMK anbumani ramadass
சென்னை கோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மாறாக வணிக வளாகம், திரையரங்குகள்,அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்று, பசுமைத்தாயகம் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்த அவரின் முந்தைய செய்தி குறிப்பில், சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து(Non-communicable diseases - NCDs), வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு (Urban Heat Island - UHI), நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும்.
கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. உலக நகரங்களுடன் ஒப்பிடும் அளவில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களுக்கான பூங்காக்கள் சென்னை நகரில் அமைந்திருக்கவில்லை.
சென்னை மாநகராட்சியின்,சென்னைக் காலநிலைச் செயல்திட்டதை(Chennai Climate Action Plan) 2023 ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்தச் செயல்திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொதுவெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தனிநபர் பொதுவெளிப் பரப்பளவை 2030, 2040, 2050ஆம் ஆண்டுகளுக்குள் முறையே 25%,33%, 40% அதிகமாக்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்ற, கோயம்பேடு பகுதியில் உள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Construct Green park at Koyembedu PMK anbumani ramadass