ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை இணைப்பது குறித்து மே 2ல் ஆலோசனை கூட்டம்..!!
Consultative meeting on May2 regarding merger of AdiDravidar welfare schools
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20-ம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்பொழுது தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகள், இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை என அரசின் பல்வேறு துறைகளின் கீழ் இங்கி வரும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
மேலும் பள்ளிக்கல்வித் துறைக்கு 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், ஆதிதிராவிட நலப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வரும் 2ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை இணைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையின் கொண்டு வருவது குறித்தான முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Consultative meeting on May2 regarding merger of AdiDravidar welfare schools