மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு - வாட்டர் பாட்டிலை தூக்கி எரிந்துச் சென்ற திமுக கவுன்சிலர்கள்.!!
dmk counsilars walk out tirunelveli corporation meeting
இன்று திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆணையர் என்.ஒ. சுகபுத்ரா, துணை மேயர் கே.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் ஆரம்பமான உடனே போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், மறைந்த முன்னாள் கவுன்சிலர் பரமசிவபாண்டியன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தச்சநல்லூர் மண்டல அலுவலக வணிக வளாக கட்டிடத்துக்கு டாக்டர் மு.கருணாநிதி மாளிகை என பெயர் சூட்டுவதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இந்தக் கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக பேச அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, மேலப்பாளையம் பகுதியில் அமைக்கப்படும் சமுதாய நலக்கூடம் எந்த வார்டுக்கு உட்பட்டது என்பது குறித்து மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலாவுக்கும் மற்றொரு திமுக கவுன்சிலர் ரம்ஜான் அலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மண்டல தலைவர் பேசும்போது, கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேலப்பாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அந்த சமுதாய நலக்கூடம் கட்டும் இடம் அப்போது வார்டு 37-ஆக இருந்தது. அதன் பின்னர் வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது.
கடந்த 2023 -ம் ஆண்டு வரை அந்த மண்டபம் கட்டும் பணி முடிவடையவில்லை. தற்போது பணிகள் பாதியில் கிடக்கிறது. ரூ.1.40 கோடி அந்த மண்டபத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மண்டபம் அமையும் இடம் தற்போது எந்த வார்டில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்டுபேசிய கவுன்சிலர் ரம்ஜான் அலி, எங்களுடைய ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் மக்கள் நலனுக்காக மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுக்கப்பட்டது என்று பேசும்போது, திடீரென்று மண்டல தலைவரான திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல் மாமன்றத்துக்குள் எழுந்து வந்து வாக்குவாதம் செய்ய முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படி அடுத்தடுத்து திமுக, அதிமுக கவுன்சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு திமுக கவுன்சிலர் ரவீந்தரும், அதிமுக கவுன்சிலர் சந்திரசேகரும் ஒரே நேரத்தில் வாய்ப்பு கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால், அதிமுக கவுன்சிலருக்கு மேயர் வாய்ப்பு வழங்கியதையடுத்து ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு கூட்ட அரங்கிலிருந்து வெளி நடப்பு செய்தார். இதில் தண்ணீர் அருகே இருந்த கவுன்சிலர்கள் மீது பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
English Summary
dmk counsilars walk out tirunelveli corporation meeting