தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! 2026 தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில்... திமுக அமைச்சர் பெருமிதம்!
DMK Minister say TN is peaceful state
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரின் வீடு அருகேயே நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர், அதுவும் ஒரு தலித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மீதான கேள்வியை எழுப்ப்பியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று முன்தினம் சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று கடலூரில் பாமக நிர்வாகி சிவகுமார் என்பவரை மர்மக்கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.
சென்னையில் தற்போது படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது.
சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற 2026 தேர்தலுக்குப் பின் அதிமுகவில் உள்ளவர்கள் திமுகவில் இணையும் அளவுக்கு, தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்குப் பின் திமுகவை தவிர இரண்டாவது டீம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றும் அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Minister say TN is peaceful state