பத்திரிகை சுதந்திரம், பொது மக்களின் நியாயம் ஆகியவற்றை பாதுகாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.. ஜி கே வாசன்.!!
gk vasan statement on may 24
பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஆட்சி , அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு உண்மைத் தன்மைக்கு ஏற்ப சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாமே தவிர வீண் பிரச்சனைக்கு வழி வகுக்க தமிழக அரசு இடம் கொடுக்கக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு , காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்கின் உண்மைத் தன்மைக்கேற்ப நடவடிக்கை அமைய வேண்டும் என்பதில் சமரசத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது . காரணம் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் விசாரணை , நடவடிக்கை என்றால் அதில் நியாயம் இருக்க வேண்டும் . அதை விடுத்து வழக்கு போட வைத்து , பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது ஏற்புடையதல்ல .
ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜூனியர் விகடனுக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தது . அந்தப் புகாரில் பத்திரிகையாளர்களை தொடர்பு படுத்தி , வழக்கு பதிவு செய்திருப்பது சரியல்ல . காரணம் புகார் அளித்த நபரை விசாரித்து அதன்பிறகு மேல் விசாரணை என்று உண்மைத்தன்மையை கண்டறிந்திருக்க வேண்டும் . அதை விடுத்து பத்திரிகையாளர்கள் மீதான வழக்கை தீவிரமாக்கும் முயற்சியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது .
அது மட்டுமல்ல புகாரை வைத்து , உண்மைக்கு புறம்பாக கைது செய்வதும் , மிரட்டல் விடுக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . குறிப்பாக பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
மேலும் ஆட்சியாளர்களின் அதிகார பலத்தால் பத்திரிகையில் பணியாற்றுபவர்களுக்கும் , பொது மக்களுக்கும் பாதுகாப்பான , சாதகமான சூழல் இல்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் .
எனவே தற்போது எழுந்துள்ள முக்கியப் பிரச்சனையாக இருக்கும் சட்டம் ஒழுங்கில் காவல் துறையினர் , புகார் , வழக்கு , விசாரணை , நடவடிக்கை போன்றவற்றில் உண்மைத்தன்மைக்கு ஏற்ப பொய்யான புகார்களை புறந்தள்ளி , குற்றம் செய்தவருக்கு தண்டனையும் , நிரபராதிகளை காப்பாற்றியும் , பத்திரிகை சுதந்திரம் , பொது மக்களின் நியாயம் ஆகியவற்றை பாதுகாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் .
English Summary
gk vasan statement on may 24