வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை.! தலைமறைவான கணவர் கைது
Husband arrested in wife suicide case in salem
வரதட்சணை கொடுமையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அனுஶ்ரீக்கும்(26), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பொன் கௌதம் நந்தா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அனுஶ்ரீயை, கணவரும், மாமியார், மாமனார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் வேதனையடைந்த அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அனுப்பிய அனுஸ்ரீ, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், அனுஶ்ரீ தற்கொலைக்கு காரணமான கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார், நேற்று கணவர் பொன் கவுதம் நந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
English Summary
Husband arrested in wife suicide case in salem