பள்ளிக்கரணை : தடுப்புச்சுவர் மீது மோதிய சொகுசு கார் - பெண் இன்ஜினியர் பலி.!
near pallikaranai car accident it company woman staff died
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா. இவர் ஒரு விடுதியில் தங்கி சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால், கிருத்திகா அருணா, தன்னுடன் பணியாற்றும் சக ஆண் நண்பர் மூன்று பேருடன் சொகுசு காரில் சென்னையை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றார்.
அந்த மூவரில் ஒருவர் காரை இயக்க, ஒருவர் அவர் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும், காரின் பின் இருக்கையில் கிருத்திகா அருணாவும், மற்றொரு ஆண் நண்பரும் அமர்ந்திருந்தனர்.
இவர்கள், துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. அதில், காரின் கதவுகள் தானாக திறந்து கொண்டதனால், பின்னால் அமர்ந்து இருந்த கிருத்திகா அருணா, காரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மேலும், மற்ற மூன்று பேரும் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் தலைமை காவலர் அனில்குமார் மற்றும் போலீசார் சாலையில் கவிழ்ந்த காரை மீட்டனர்.
அதன் பின்னர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near pallikaranai car accident it company woman staff died