சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வாகியுள்ள நெல்லை தமிழ் பேராசிரியை..!
Nellai Tamil professor selected for the Sahitya Akademi Translation Award
2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியை ப.விமலா (36), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த பங்கிராஜ்- மரியம்மாளின் இரண்டாவது மகள் ஆவார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் செயின்ட் ஊர்சிலாஸ் பள்ளியிலும், பிளஸ்2 படிப்பை திருவட்டார் அருணாச்சலம் பள்ளியிலும் முடித்துள்ளார். இவர் குடும்பச் சூழலால் சிறுவயதில் கல்லூரிக்கு சென்று படிக்க இயலாமல் முந்திரி சேகரிக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலை தொலைநிலை கல்வி முறையில் பெற்றுள்ளார். அத்துடன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில் மற்றும் பி.எச்டி பட்டங்களைப் பெற்றுள்ளார்.
ப.விமலா சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். அவரது தாய் மரியம்மாள், மருத்துவமனை ஒன்றில் வெந்நீர் பானைகளை சுமந்து சென்று முதியோர்களை பராமரிக்கும் கடின வேலைகளை செய்து குடும்பத்தினை பார்த்து வந்துள்ளார்.

குடும்ப சுமையைச் சுமந்த தாயாரின் தியாகமே தனது கல்வி பயணத்திற்குத் துணைபுரிந்ததாக விமலா உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். பள்ளியில் முதலிடம் பிடித்தும் தமது அக்காள் விஜிலா, தம்பி வின்ஸ் ஆகியோர் தமக்காக படிப்பை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்த் துறை பேராசிரியையான விமலா இதுவரை நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய 'எண்ட ஆண்கள்' என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக, 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
English Summary
Nellai Tamil professor selected for the Sahitya Akademi Translation Award